காலநிலை மாற்றத்தின் பிடியில் சிதையும் நீலகிரி பழங்குடிகளின் வாழ்வியல்
மேற்குத் தொடர்ச்சி மலையின் மகுடமாகத் திகழும் நீலகிரி மாவட்டம், உலகிலேயே பல்லுயிர் பெருக்கம் நிறைந்த அரிய ‘சோலைக்காடுகள்’ (Shola Forests) மற்றும் புல்வெளிகளின் தாயகம். பல நூற்றாண்டுகளாக இந்தக் அடர்ந்த காடுகளுடனும் வன உயிரினங்களுடனும் இணைந்து, இயற்கையைத் தாயாக வழிபடக்கூடியவர்கள் இங்குள்ள பூர்வகுடிகள். ஆனால் இன்று, உலகமயமாதலின் வேகத்திற்கும் இயற்கையின் சீற்றத்திற்கும் இடையே மாட்டிக்கொண்டு இவர்களின் வாழ்வாதாரமும், அடையாளமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து வருகின்றன. காலநிலை மாற்றம் (Climate Change) என்பது வெறும் உலகளாவிய விவாதம் அல்ல; அது இவர்களின் அன்றாட வாழ்க்கையை எப்படிப் பிடுங்கித் தின்னத் தொடங்கியுள்ளது என்பதைப் பேசுகிறது இந்தக் கள அறிக்கை.
சிதையும் அடையாளங்கள்: பெட்டகுறும்பர், பணியர், காட்டுநாயக்கர்களின் மண் வீடுகள்
தலைமுறை தலைமுறையாகக் காடுகளோடு இயைந்து வாழும் பெட்டகுறும்பர், பணியர் மற்றும் காட்டுநாயக்கர் ஆகிய பழங்குடியின மக்களின் அடையாளம் அவர்களின் வீடுகள். உள்ளூர் மண், மூங்கில் மற்றும் புற்களைக் கொண்டு தங்களின் கைகளாலேயே இந்தத் பாரம்பரிய வீடுகளை அவர்கள் அமைத்து வந்துள்ளனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் நிலவி வரும் தீவிர காலநிலை மாற்றம், இவர்களின் தொல் மரபு வீடுகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. எதிர்பாராத காலங்களில் கொட்டும் அசுரத்தனமான கனமழையால், இந்த பலவீனமான மண் கட்டடங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் தவிக்கின்றன. அளவுக்கு அதிகமான ஈரப்பதத்தாலும் வெள்ளத்தாலும் இவர்களது பாரம்பரிய சுவர்கள் இடிந்து விழுகின்றன. கூரைகள் மட்கிப்போய், ஒட்டுமொத்த வாழ்விடங்களும் சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தங்களின் அடையாளத்தை இழந்துவிட்டு, தங்களுக்கு ஒவ்வாத நவீன சிமெண்ட் வீடுகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு இவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.




காலநிலை மாற்றங்களும் பாரம்பரிய மருத்துவமும்
நீலகிரி காடுகள் ரசாயனம் கலக்காத பச்சிலைகள், வேர்கள், மரப்பட்டைகள் மற்றும் காட்டுத் தேன் ஆகியவற்றைக் கொண்ட ஒரு இயற்கை மருந்தகம். இந்த மூலிகை மருத்துவ முறையைப் பல்லாண்டுகளாகக் காத்து வருபவர்கள் இங்குள்ள பாரம்பரிய மூலிகை மருத்துவர்கள்.
அவர்களில் ஒருவரான மூலிகை மருத்துவர் நந்தகுமார் (55) தான் எதிர்கொள்ளும் தற்போதைய தற்போதய காலநிலை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். “தற்போதய காலநிலை மாற்றங்களால் உணவு முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கூடலூர் பகுதி என்பது நல்ல மழைபொழியும் இடமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த அதிகன மழை காரணமாக சில மருந்துகள் தயாரிப்பதற்கு நந்தகுமார் பாடு பட்டுள்ளார். உதாரணமாக சோரியாசிஸ் என்ற நோயிக்கு தண்டர்பால் என்ற மூலிகையை பயன்படுத்துகிறார். மேலும் அதை 13 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைத்து தயாரிப்பதில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் பெரிய சவாலை எதிர்க்கொண்டேன். அவர் இருக்கும் மணல்வயல் பகுதியை சுற்றி போதுமான மூலிகைகள் கிடைக்கும் ஆனால் அதை எடுக்க செல்வது என்பது கடினமாக உள்ளது. நீலகிரி மாவட்டம் பொதுவாக தேயிலை , காபி போன்ற பணப்பயிர்கள் விளையும் நிலஅமைப்பாக உள்ளது. அதில் தேயிலை தோட்டங்களில் மூலிகைகள் கிடைப்பது என்பது மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. காரணம் காபி தோட்டங்களை விட தேயிலை தோட்டங்களில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் பாய்ச்சப்படுகிறது. இதனால் பெரிய அளவில் மூலிகை தாவரங்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனை தற்போது மருந்துகளின் தரம் குறைந்து வருவதுடன், நோய்கள் அதிகமாகி வருகிறது. என்பதை சுட்டிக்காட்டுகிறார். உணவு முறையால் ஏற்படும் புதிய நோய்களை நான் தற்போது பார்த்து வருகிறேன்.




‘ராகி’
மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் கிராமத்திற்குச் சென்றால், 76 வயதான மாண்பி பாட்டியைப் பார்க்க முடியும். பெட்டக்குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்தத் பாட்டி, தங்களின் தொல் மரபு மாறாமல், தன் குடும்பத்தோடு இணைந்து ஆண்டுக்கு ஒருமுறை ‘ராகி’ (கேழ்வரகு) விவசாயம் செய்து வருகிறார். இவர்களின் முதன்மைப் பாரம்பரிய உணவான ராகி, குடும்பத்தின் உணவுத் தேவைக்காகத் தென்மேற்குப் பருவமழைக்காலத்தை மையமாகக் கொண்டு பயிரிடப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முற்றிலும் தவறியதோடு, கடுமையான வறட்சியும், மிகக் குறைவான மழைப்பொழிவும் மசினகுடிப் பகுதியை வாட்டி வதைக்கிறது.




.





